இலங்கையின் வடக்கே அமைந்துள்ளது கிளிநொச்சி மாவட்டம். மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி.
பார்க்குமிடமெல்லாம் தென்னந்தோப்புகள், மா,பலா,வாழை எனும் முக்கனி தரும் மரங்கள்,வயல்நிலங்கள்,அவற்றிற்கு இடையே வளைந்தோடும் வாய்க்கால்கள்,சிறுசிறு நீர்தேக்கங்கள், அழகிய மலர்கள்,தேடிவந்து அதிலமரும் வண்டினங்கள்,வீதிகளில் ஒய்யாராமாய் பவனிவரும் கால்நடைகள், என்று ஒட்டுமொத்த அழகையும் ஒன்றாக்கி வட்டக்கச்சி எங்கும் பசுமைத்தோல் போர்த்தி வைத்திருக்கிறாள் பூமித்தாய்.
எந்நேரமும் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாக இருக்கும் மக்கள்,மாணவர்கள்,அமைதியான சூழல்,இயற்கையான காற்று என்று பார்ப்பவர் மனங்கவரும் ஒரு சொர்க்கபூமியாகவே திகழ்கிறது வட்டக்கச்சி.